உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா விமர்சனங்களுக்கு 3 நாட்கள் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு

சினிமா விமர்சனங்களுக்கு 3 நாட்கள் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ் சினிமாவில் கடந்த மாதம் வெளிவந்த 'கங்குவா' படம் தியேட்டர்களில் ரசிகர்களின் விமர்சனங்களாலும், ஊடகங்களின் விமர்சனங்களாலும் அதன் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று திரையுலகில் சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்துக்களை யு டியூப் சேனல்கள் எடுப்பதைத் தடுக்க வேண்டும், விமர்சனங்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதே கருத்தை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் வலியுறுத்தியது.

அதையடுத்து தியேட்டர்களில் யு-டியுப் சேனல்கள் ரசிகர்களின் கருத்துக்களை வீடியோ எடுப்பதை தியேட்டர்காரர்கள் அனுமதிக்கவில்லை. அதனால், கடந்த இரண்டு வாரங்களாக தியேட்டர்களின் வெளியே அந்த வீடியோவை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட விமர்சனங்களை யு-டியுப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வெளியிட மூன்று நாட்களுக்குத் தடை விதிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென 'ரிட் மனு' ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று(டிச., 3) விசாரணைக்கு வர இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !