உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சபரிமலையில் திலீபிற்கு சிறப்பு தரிசனம்: நீதிமன்றம் அதிருப்தி

சபரிமலையில் திலீபிற்கு சிறப்பு தரிசனம்: நீதிமன்றம் அதிருப்தி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் நேற்று சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் விதிமுறைகளுக்கு மாறாக போலீஸ் பாதுகாப்புடன் சென்றதுடன் அரிவராசனம் பாடல் முடியும் வரை அவர் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இது நேற்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் பந்தாவாக எப்படி சாமி தரிசனம் செய்தார். எதனால் அவருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது. ஐயப்பனுக்கு முன் அனைவரும் சமம் என்பதே சபரிமலை கோட்பாடு, அதை மீறியது எப்படி என்று கேள்வி எழுப்பினர்.

இச்சம்பவம் குறித்து நேற்று கேரள உயர்நீதிமன்றத்தின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் திலீப் சன்னிதானத்திற்கு வந்தது எப்படி? என கேள்வி எழுப்பிய சிறப்பு அமர்வு நீதிபதிகள், அரிவராசனம் பாடல் முடியும் வரை நடிகர் திலீப்பிற்கு சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி? என்ற கேள்வியையும் எழுப்பினர்.

சம்பவம் குறித்து தேவஸ்தான ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக தேவஸ்தானம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேவசம் போர்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !