நடிகர் மோகன் பாபு தலைமறைவா...?
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான மோகன்பாபு குடும்பத்தில் அவருக்கும் அவரது இளைய மகன் மனோஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு டிவி நிருபர் ஒருவரைத் தாக்கியதாக மோகன் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார் மோகன்பாபு. ஆனால், நீதிமன்றம் முன்ஜாமீன் அளிக்கவில்லை.
இதனால், எந்த நேரத்திலும் மோகன் பாபு கைது செய்யப்படும் சூழல் உருவானது. அதைத் தொடர்ந்து மோகன் பாபு தலைமறைவாகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. ஹைதராபாத்தில் அவருக்கு சொந்தமான இடங்களில் காவல் துறையினர் தேடி வருவதாகவும், ஆனால், அவர் அங்கு இல்லை என்றும் தெரிகிறது.
இதனிடையே, மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக நேற்று கூறியிருந்தார். அது குடும்ப சண்டை சம்பந்தப்பட்டதா அல்லது திரைப்படம் சம்பந்தப்பட்டதா என்று தெரியவில்லை.
இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன் மோகன்பாபு தனது எக்ஸ் தளத்தில், ‛‛எனது முன்ஜாமின் மனு தள்ளுபடியாகவில்லை, தவறான தகவல் பரவுகிறது. தற்போது நான் எனது வீட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வில் உள்ளேன். உண்மையை என்னவென்று சரிபார்க்கும்படி தாழ்மையும் கேட்டுக் கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று மோகன் பாபு கைது செய்யப்பட்டால் அடுத்த பரபரப்பாக அமையும்.