நீளமான தலைப்பில் 3 காதல் கதை
 எம்.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் கவுரி சங்கர் தயாரித்து இயக்கி உள்ள படம் 'காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம்'. சரவணன், அபிநயா அன்பழகன், ஸ்ரீ பவி , ஐஸ்வர்யா பாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, அகல்யா உள்பட நடித்துள்ளனர். ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார், து.மகிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் கவுரி சங்கர் படத்தை பற்றி கூறியதாவது:  இன்றைய காதலை மூன்று  வகைப்படுத்தியிருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பது தான் அது. புரிந்த காதல் சுகமானது. புரியாத காதல் சுமையானது. மூன்றாவது புரியாத காதல் முடிவில்லாதது. இதற்காக ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு ஜோடிகளை வைத்திருக்கிறேன். இன்றைய இளைய சமுதாயம் சமூகத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்களா? அதையே தொடர்கிறார்களா? என்பதை சுவையான திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறேன். என்றார்.