உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படும் ராஷி கண்ணா

ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படும் ராஷி கண்ணா


பா.விஜய் இயக்கியுள்ள ‛அகத்தியா' படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் மற்றும் டபிள்யு ஏ எம் நிறுவனத்தின் சார்பில் அனீஸ் அர்ஜுன் தேவ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் இப்படம், பேன்டஸி-ஹாரர் ஜானரில் தயாராகி உள்ளது. வரும் 28ம் தேதி பான் இந்திய அளவில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் பா விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கண்ணா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஒளிப்பதிவாளர் தீபக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ராஷி கண்ணா, ‛‛நான் ஏற்கனவே தமிழில் அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களில் நடித்துள்ளேன். ஹாரர் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் இந்த படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம். என் உடன் நடித்த ஜீவா திறமையான நடிகர். அதேபோல் இயக்குனர் பா விஜய் மிகவும் பிரம்மாண்டமாகவும், அதே நேரம் சோசியல் மெசேஜ் ஒன்றையும் படத்தில் சொல்லி உள்ளார். இந்த படத்துக்கு பிறகு அவர் மிகப்பெரிய இயக்குனராக தமிழ் சினிமாவில் அறியப்படுவார். அதேபோல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகப்பொருட்செலவில் பிரமாண்டமாக அகத்தியா படத்தை தயாரித்துள்ளார். தீபக் குமாரின் ஒளிப்பதிவு இங்கு திரையில் பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறது. அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும்'' என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், நீங்கள் பாலிவுட்டிலும் நடிக்கிறீர்கள், கோலிவுட்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், எப்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ராஷி கண்ணா, ‛‛ஓ நன்றி, அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வந்தால் நிச்சயமாக நடிப்பேன். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !