உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் சினிமாவை அழிக்கிறார்கள்: ஸ்ரீகாந்த் வேதனை

ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் சினிமாவை அழிக்கிறார்கள்: ஸ்ரீகாந்த் வேதனை

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் சார்பில் மை இண்டியா மாணிக்கம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்'. 1980களில் நெஞ்சமெல்லாம் நீயே, உதயகீதம், கீதாஞ்சலி, உயிரே உனக்காக உனக்காகவே வாழ்கிறேன், பாடு நிலாவே போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கே.ரங்கராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த படத்தை இயக்கி உள்ளார். இதில் ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடித்துள்ளனர். இந்த படம் வருகிற மார்ச் 14ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நாயகன் ஸ்ரீகாந்த் பேசியதாவது: திரையுலகில் 25 வருடம் நிறைவு செய்துள்ளேன். நிறைய முன்னணி இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறேன். இப்போது ரங்கராஜ் சாரிடம் வேலை செய்து விட்டேன் அனைவரிடமும் வேலை செய்தது மகிழ்ச்சி.

சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது. கடைசி வரை சினிமாவில் இருக்கத் தான் ஆசைப்படுகிறேன், படத்தில் தம், தண்ணி, ஆடை பற்றி எல்லாம் நாம் பேசக் கூடாது, அது அவரவர் விருப்பம். எது பிடிக்கும், எது பிடிக்காது என மக்கள் முடிவு செய்யட்டும்.

எனக்குப் பிடித்த படம் 'சதுரங்கம்' அந்தப் படத்தை எப்படியோ கொன்று விட்டார்கள், ஆனால் 12 வருடம் கழித்து ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெறுகிறது, இதுதான் சினிமா. ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் சினிமாவை அழிக்கிறார்கள். எல்லோரும் இணைந்து முதலில் சினிமாவை காப்பாற்ற வேண்டும். சினிமா தான் என் குடும்பம், இன்னும் நான் சினிமாவில் இருக்கிறதை பெருமையாக நினைக்கிறேன். இவ்வாறு ஸ்ரீகாந்த் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !