உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜாவுக்கு இதுவரை வாழ்த்து சொல்லாத விஜய்

இளையராஜாவுக்கு இதுவரை வாழ்த்து சொல்லாத விஜய்

தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி நடிகராக விஜய் உயர்ந்ததற்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்த படம் 'காதலுக்கு மரியாதை'. பாசில் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் 1997ல் வெளிவந்த அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதற்கு முன்பு வரை விஜய் நடித்து வெளிவந்த படங்கள் இளம் ரசிகர்களை மட்டுமே ரசிக்க வைத்தது.

'காதலுக்கு மரியாதை' படம்தான் குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்த்து விஜய் மீதான இமேஜை பல மடங்கு உயர்த்தியது. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இப்போதும் கூட 'என்னைத் தாலாட்ட வருவாளா' பாடலைக் காரில் கேட்டுச் செல்பவர்கள் அதிகம்.

அப்படத்தின் வெற்றிக்குக் காரணமான இளையராஜா லண்டனில் இன்று சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்தியாவுக்கும் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாக அது நடக்க உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், இளையராஜாவை நேரில் சென்று முதலில் வாழ்த்தினார். அதன்பின் பல அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் அவரை நேரில் சென்று வாழ்த்தினார்கள்.

ஆனால், அரசியல் கட்சித் தலைவராகவும், நடிகராகவும் இருக்கும் விஜய் இதுவரை ஒரு வாழ்த்தைக் கூடச் சொல்லவில்லை என்பது இளையராஜா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

விஜய் போலவே, இன்னும் சில நடிகர்களும், நடிகைகளும் கூட வாழ்த்து சொல்லாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவே வேறு மொழி சினிமாவில் நடந்திருந்தால் அவரைக் கொண்டாடி இருப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !