பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன்
சில நடிகர்கள் சில கேரக்டர்களுக்கு மிகச் சரியான பொருத்தமாக இருந்தால், தொடர்ந்து பெரும்பாலும், அந்த கேரக்டர்களிலேயே அவர்கள் நடிப்பார்கள். குறிப்பாக ரியாஸ்கான் மாதிரியான சிலர் போலீசாகவே நடிப்பார்கள், சிலர் டாக்டராகவே நடிப்பார்கள், சிலர் கல்லூரி ஆசிரியராகவே நடிப்பார்கள்.
இப்படி, தான் நடித்த பெரும்பாலான படங்களில் நாரதராக நடித்தவர் நாகர்கோவில் கே.மகாதேவன். கிட்டத்தட்ட தமிழ் சினிமா மறந்த நடிகர் இவர். அடிப்படையில் எழுத்தாளரான மகாதேவன் நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி வந்தார். பின்னாளில் நாடக நடிகராக இருந்தார். நாடகங்களிலும் நாரதர் வேடத்தில் நடித்தார்.
'பக்த கௌரி' என்ற படத்தில் அறிமுகமான இவர் சினிமாவிலும் நாரதராகவே நடித்தார். கங்காவதார், பிரபாவதி, ஸ்ரீவள்ளி, ஏகம்பவாணன், சக்ரதாரி, காமவல்லி, ஸ்ரீகிருஷ்ணா துலாபாரம், பாரிஜாதம் உள்ளிட்டவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.
நாரதராக அதிக படங்களில் நடித்ததால் நாகர்கோவில் மகாதேவன் என்ற அவரது பெயர் நாளடைவில் 'நாரதர் மகாதேவன்' என்று மாறியது. 'என் மனைவி' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நாயகனாக நடித்தார்.