உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல்

பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜேசுதாஸ் பாடிய 'அரிவராசனம்' பாடலோடுதான் நடை திறக்கப்படும், மூடப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதேபோன்ற ஒரு அரிய பாக்கியம் பெற்ற இன்னொருவர் பாடகி பி.லீலா.

மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி சொல்ல குழந்தை கண்ணனே தலை அசைத்து ஏற்றுக்கொண்ட ஸ்ரீமந்நாராயணீயம் பாகவதத்தை பி.லீலா பாடி இருந்தார். அந்த பாடலே குருவாயூர் நடைதிறக்கும்போது ஒலிக்கிறது. அதாவது இந்த பாடலை கேட்டுத்தான் குருவாயூரப்பன் கண் திறக்கிறார் என்பது ஐதீகம்.

கேரளாவின் பாலக்காடு பக்கத்தில் சித்தூர் என்ற கிராமத்தில் வி.கே.குஞ்சன் மேனன், லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது மகளாக பிறந்தவர் பி.லீலா என்கிற பொறயாத்து லீலா. மணிபாகவதர், பத்தமடை கிருஷ்ணா ஐயர், ராமபாகவதர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற மாமேதைகளிடம் இசை பயின்றவர்.

12 வயதில் ஆந்திர மகிள சபாவில் இவரது இசை அரங்கேற்றம் நடந்தது. 1948-ம் ஆண்டு 'கங்கணம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். 1960ம் ஆண்டு பி.சுசீலா வரும்வரை இவரே தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்தார்.

'தை பொறந்தா வழி பொறக்கும் (தை பொறந்தா வழி பொறக்கும்), நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும் (இரும்புத்திரை), கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே, ராஜா மகள் ரோஜா மலர், நான் ராஜா மகள் (வஞ்சிக்கோட்டை வாலிபன்), வாராயோ வெண்ணிலாவோ... கேளாயோ எங்கள் கதையே... (மிஸ்ஸியம்மா), காத்திருப்பான் கமலக்கண்ணன் (உத்தமபுத்திரன்) போன்றவை அவர் பாடிய முக்கியமான பாடல்கள்.

குருவாயூரப்பன் பற்றி ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். 5 ஆயிரம் திரைப்படங்களில் சுமார் 30 ஆயிரம் பாடல்கள் வரை பாடி உள்ளதாக கூறுவார்கள். 1991ம் ஆண்டு வெளியான 'கற்பூர முல்லை' படத்தில் இளையராஜா இசையில் 'ஸ்ரீசிவசுத பதகமல...' என்ற முருகன் பாடலை பாடினார். இதுதான் அவர் சினிமாவுக்கு பாடிய கடைசி பாடல்.

2005ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தனது 76வது வயதில் மறைந்தார். வாழும்போது பெரிதாக அவருக்கு விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் அவர் இறந்த பிறகு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !