உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல்

'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல்


சூரி கதை நாயகனாக நடித்துள்ள படம் 'மாமன்'. இந்த படத்தை 'விலங்கு' வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கி உள்ளார். வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் சூரி ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் 'லப்பர் பந்து' புகழ் ஸ்வாஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் நடித்துள்ளனர். 'கருடன்' படத்தை தயாரித்த லார்க் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் கூறியிருப்பதாவது: விலங்கு தொடர், கொலை, ரத்தம் திகிலை கொண்டது. அதிலிருந்து முற்றிலும் வேறு ஒரு விஷயத்திற்குப் போக நினைத்தேன் அதுதான் இந்த படம். நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து அக்கறையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உதவி, உதவிகளை பெற்று விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். சினிமாவிலும் அந்த உறவுகள் பற்றி சொல்ல வேண்டி இருக்குது. இதுகூட அப்படியான விதம்தான். 6 வயதுப் பையனை வச்சுக்கிட்டு, உறவுகளின் நெருக்கத்தையும் அதில் இருக்கிற பிரச்னைகளையும் சிரிப்பாகவும் கொந்தளிப்பாகவும் எமோஷனலாகவும் சொல்லியிருக்கேன்.

சூரிக்கு சொன்ன கதைக் கருதான் இந்த படம். உண்மையான சம்பவமும்கூட. இதில் யாரும் வில்லன்கள் கிடையாது. அவங்கவங்க பக்கத்தில் போய் அவரவர்களுக்கான நியாயத்தைச் சொல்லியிருக்கோம். எப்போதும் உறவுகள் செய்கிற தவறுகள் நமக்குப் பெருசா கண்ணுக்குத் தெரியாது. நிறைய பிரச்னைகள் நாம் புரிந்துகொள்ளாததில் இருக்கு. தவறு செய்யாத மனுஷன் இந்த உலகத்தில் கிடையாது, அதனால்தான் கிராமத்து மண்ணையும் அந்த மனசையும் மறக்க முடியாத படமாக எடுக்க முயற்சி பண்ணியிருக்கேன்.

கதையின் நாயகன் சூரி, தன் அக்கா மகனோட பாசமாகவும், பழகியவளோட காதலுமாக மருகித் தவிப்பதும் இதிலிருக்கு. இப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கணும்னு தோணுகிற இடங்களை அடுக்கி வச்சிருக்கேன். 'மாமன்' படம் பார்க்கும்போது நம்ம உறவுகள் அத்தனை பேர் ஞாபகமும் வரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !