உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''கதை நான் எழுதினாலும் பெயர் வேண்டாம் என்றேன்'': 'மாமன்' சூரி

''கதை நான் எழுதினாலும் பெயர் வேண்டாம் என்றேன்'': 'மாமன்' சூரி


'விலங்கு' என்ற வெப் சீரியசை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் படம் 'மாமன்'. படம் குறித்து சூரி பேசுகையில், இந்த படத்தில் ராஜ் கிரண் நடிக்க ஒப்புக் கொண்டதே எங்களுக்கெல்லாம் பெருமை. அதேபோல் கதைக்காக சம்பளம் எதுவும் வேண்டாம் என்று சொன்ன பாடலாசிரியர் விவேக்கிற்கு நன்றி. 'சீமராஜா' படத்திற்காக இயக்குனர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள் என்றார். அதற்காக ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். என்னுடைய மனைவியும் உதவி செய்தார். படத்தை பார்க்க தியேட்டருக்கு ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிகள் தான் இடம்பெற்றது.

அது ஏமாற்றமாக இருந்தாலும் அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது. அன்று அது போன்றதொரு வாய்ப்பை எனக்கு வழங்கவில்லை என்றால், தற்போது என் மீது எனக்கு நம்பிக்கை இருந்திருக்காது. இயக்குனர் பொன்ராமுக்கு நன்றி. இப்படத்தின் கதையை நான் எழுதி இருந்தாலும் எனது பெயர் வரவேண்டாம் என இயக்குநரிடம் சொல்லி இருந்தேன். ஆனாலும் இப்படத்தின் கதை என எனது பெயர் இடம் பிடித்திருக்கிறது.

நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம். இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது. 'சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி'. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்தப் படத்தின் கதை உருவானதும் அங்கிருந்து தான். நான் இந்த படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களை தான் சொல்லி இருக்கிறேன்.. தாய் மாமனை பற்றி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு சின்ன பையனுக்கும் அவனுடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை சொல்லி இருக்கிறோம். மாஸ்டர் பிரகீத் சிவன் மருமகனாக நடிக்கிறான். அவன் இந்த பட இயக்குனரின் மகன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !