பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் பாடகி மங்லி. புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ அண்டாவா என்கிற பாடலை தெலுங்கில் இவரது சகோதரி இந்திரவதி பாடியிருந்தார். இதே பாடலை கன்னடத்தில் மங்லி பாடி புகழ் பெற்றார். சமீபத்தில் செவ்வலே என்கிற பகுதியில் உள்ள திரிபுரா ரிசார்ட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடினார் மங்லி. இந்த நிகழ்வில் அவரது நண்பர்களும் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அந்த சமயத்தில் திடீரென அங்கே வந்த போலீசார் சோதனை செய்தபோது அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்கள் அங்கே பயன்படுத்தப்பட்டதும் மேலும் ஒரு சிலர் போதைப்பொருளை உபயோகித்ததும் தெரியவந்தது. அது மட்டுமல்ல இப்படி ஒரு நிகழ்வை நடத்துவதற்கு முறைப்படி போலீசாரிடம் இருந்து முறைப்படி எந்த அனுமதியும் மங்லி பெறவில்லையாம். இதனைத் தொடர்ந்து மங்லி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க அந்த ரிசார்ட் நிர்வாகத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.