ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு
கடந்த 2006ல் ஜோதிகா, குஷ்பூ, சரிதா ஆகியோர் இணைந்து நடித்து தமிழில் வெளியான படம் 'ஜூன் ஆர்'. இந்த படத்தை ரேவதி எஸ் வர்மா என்பவர் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து 2012ல் 'மேட் டாட்' என்கிற படத்தை இயக்கியவர், கிட்டத்தட்ட 13 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது 'இ வளையம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இன்று (ஜூன்-13) இந்த படம் வெளியாகி உள்ளது. மொபைல் போன் இல்லாமையால் ஏற்படும் பதட்டம், தவிப்பு ஆகியவற்றால் ஏற்படும் நோமோபோபியா என்கிற ஒரு வகை பாதிப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
குறிப்பாக டீனேஜுக்கு உட்பட்ட இளைஞர்களும் குழந்தைகளும் மொபைல் போன் மூலமாக சந்திக்கும் பிரச்னைகளை இந்த படம் பேசுகிறது. இது ஒரு விழிப்புணர்வு படம் என்பதை கருத்தில் கொண்டு கேரள அரசு இந்த படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி இன்று கொச்சியில் ஆசிரியர்கள், மனநல ஆலோசகர்கள், பெற்றோர் சங்கத்தினர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் ஆகியோருக்கு பிரத்தியேகமாக திரையிடப்பட்டு காட்டப்பட்டது.