ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி
மலையாளத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதைத்தொடர்ந்து இவருக்கு தமிழில், அதைவிட அதிகமாக தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தன. தற்போது தெலுங்கு படங்களில் தான் அவர் அதிக அளவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ் கோபி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஜேஎஸ்கே ( ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா ) என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், “மலையாள திரையுலகில் என்னை வேண்டுமென்றே சிலர் ஒதுக்கி வைக்கிறார்கள். எனக்கு நடிப்பு வரவில்லை என்று அவர்கள் காரணம் சொல்கிறார்கள். இதனால் நிறைய டிரோல்களை நான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நீங்கள் விரும்பினால் டிரோல் பண்ணுங்கள், ஆனால் கொல்லாதீர்கள்” என்று உருக்கமுடன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அனுபமாவை சமாதானப்படுத்தும் விதமாக பேசிய நடிகர் சுரேஷ் கோபி, “ஒரு உண்மை தெரியுமா? சிம்ரன் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவரை மலையாள திரையுலகம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியது. ஆனால் அதன்பிறகு, எவ்வளவு பெரிய இயக்குனர்கள் சிம்ரனை தங்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க அவர் பின்னால் ஓடினார்கள் என்று எனக்கே தெரியும், சிம்ரன் மட்டுமல்ல அசின், நயன்தாரா எல்லோருமே இதுபோன்று பிரச்சனைகளை, சங்கடங்களை சந்தித்து அதன்பிறகு மற்ற பல்வேறு மொழிகளில் பிரபலமானார்கள், அதேபோல உன்னுடைய வாழ்க்கையிலும் நடக்கும் அனுபமா, இதைத்தான் கர்மா என்கிறோம், நிச்சயமாக இது நடக்கும், என்னுடைய பிரார்த்தனை எப்போதும் உனக்கு உண்டு” என்றார்.