கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ்
விஜய் நடித்த லியோ படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், கெஸ்ட் ரோலில் அமீர்கான் என முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தை ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைத்து விட வேண்டும் என்பதற்காக உலக அளவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛இதுவரை நான் பல படங்களை இயக்கியிருந்த போதும், இந்த கூலி படத்தை இயக்கும்போது கவனம் சிதறக்கூடாது என்பதற்காக சோசியல் மீடியாவில் இருந்துகூட வெளியேறினேன். இரு ஆண்டுகளாக கூலி படத்திற்காக மட்டுமே உழைத்தேன். அந்த அளவுக்கு சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பை போட்டு உள்ளேன். அந்த கடின உழைப்பு இப்போது படத்தில் தெரிகிறது'' என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.