'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ?
சத்யசிவா இயக்கத்தில், சசிகுமார், லிஜோமோள் ஜோஸ் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'ப்ரீடம்' படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் பைனான்ஸ் சிக்கல் காரணமாக இன்று வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். இன்றைக்குள் அந்த சிக்கலை தீர்த்துவிட்டு நாளை படத்தை வெளியிட உள்ளார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகுமார் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அடுத்த வெளியீடான இந்த 'ப்ரீடம்' படமும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியையும் நடத்தினார்கள். ஆனால், திடீரென அறிவிக்கப்பட்டபடி படத்தை வெளியிட முடியாத நிலை உருவாகி உள்ளது.
பிரபலமான நடிகர்களின் படங்கள் கூட இப்படியான சிக்கலில் மாட்டுவது திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அதிர்ச்சியான ஒன்றுதான். இருக்கும் சிக்கல்களைத் தீர்த்துவிட்டு பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்க வேண்டும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.