75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை
மலையாளத்தில் கடந்த 2016ல் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ‛மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா பாலமுரளியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் லீனா ஆண்டனி. அந்த படம் கொடுத்த பிரபலத்தில் அதன் பிறகு பிஸியான நடிகையாக மாறினார். இன்னொரு பக்கம் படிப்பதற்கு ஆர்வம் இருந்தால் வயது ஒரு தடை இல்லை என்பதை 73 வயதான லீனா ஆண்டனி கடந்த 2023ல் நிரூபித்து இருந்தார்.
ஆம்.. அந்த வருடத்தில் தான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றார் லீனா ஆண்டனி. அதற்கு முன்பு இரண்டு முறை தேர்வு எழுதி தோற்றாலும் மனம் தளராமல் மூன்றாவது முறை எஸ்எஸ்எல்சி பாஸ் செய்தார். அந்த உற்சாகத்தில் பிளஸ் டூ தேர்வையும் எழுதுவேன் என்று அப்போதே கூறியிருந்தார்.
அதன்படி கிடைத்த நேரத்தில் எல்லாம் திருச்சிட்டக்குளம் என்கிற ஊரில் உள்ள என்எஸ்எஸ் என்கிற மேல்நிலைப் பள்ளியில் அதற்கான பாடங்களை கற்று தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத தயாராகிவிட்டார். 13 வயதிலேயே தந்தை இறந்து விட்டதால் குடும்ப சுமை காரணமாக படிப்பை கைவிட்ட இவர் நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபோது அதில் உடன் நடித்த கே,எல் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் கணவரும் இறந்துவிட மகனும் மருமகளும் கொடுத்த ஊக்கத்தில் தான் மீண்டும் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முன் வந்தார். இப்போது பிளஸ் டூ தேர்வு எழுதும் வரை முன்னேறியுள்ளார்.