பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர்
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர்கள், ஒரு சில சிங்கள படங்களுக்கு இசை அமைத்திருப்பார்கள். ஆனால் தொடர்ச்சியாக சிங்கள படங்களுக்கு இசை அமைத்து ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தவர் சுசர்லா எஸ்.தட்சிணாமூர்த்தி.
அடிப்படையில் தெலுங்கு இசை அமைப்பாளரான இவர் சர்வாதிகாரி, வளையாபதி, கல்யாணி, வேலைக்காரி மகள், மங்கையர் திலகம், அலிபாபாவும் 40 திருடர்களும் உள்பட ஏராளமான தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் . ஏராளமான தமிழ், தெலுங்கு பாடல்களையும் பாடி உள்ளார். சொந்தமாக இசை தட்டு நிறுவனமும் நடத்தி வந்தார்.
'சுஜாதா' என்ற சிங்கள படத்தின் மூலம் இலங்கை திரையுலகில் அறிமுகமான இவர் அதன்பிறகு அங்கு தயாராகும் படங்களுக்கு தொடர்ச்சியாக இசை அமைத்தார். தனது 90வது வயதில் 2012ம் ஆண்டு சென்னையில் காலமானார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டபோது, தான் மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை என்றும், மரணம் அடைய விரும்புவதாகவும் இவர் சொன்னதாக சொல்வார்கள். என்றாலும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.