தள்ளிப் போகிறதா துல்கர் சல்மானின் 'காந்தா' ?
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காந்தா'. அந்தக் காலத்துக் கதையாக உருவாகி உள்ள இப்படத்தை செப்டம்பர் 12ம் தேதி வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது படத்தைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு படத்தை வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகிறார்களாம்.
முக்கிய படங்களை வெளியிடும் தேதி பற்றிய முடிவுகளை அந்தப் படங்களின் ஓடிடி உரிமையை வாங்கும் நிறுவனங்கள்தான் தீர்மானிக்கிறது. தியேட்டர் உரிமையை விடவும் அதிக பணம் கொடுத்து அவற்றை வாங்குகிறார்கள். ஒரே வாரத்தில் பெரிய படங்களை அவர்கள் வெளியிடுவதைத் தவிர்க்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு, மூன்று பெரிய படங்களாவது அவர்களது வெளியீட்டுப் பட்டியலில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அதனால், தற்போது 'காந்தா' படத்தைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.
இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.