உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி

50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி

கேரளாவை சேர்ந்த நமிதா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க மாப்பிள்ளை படத்தில் அறிமுகமாகி பின்னர் ட்ரிபிள்ஸ், நவம்பர் ஸ்டோரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் சின்னத்திரை கலைஞர் பாலா நடிக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் நடித்துள்ளார். ஜெய் கிரண் தயாரிக்க, ஷெரிப் இயக்கி உள்ளார். இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேலுவும் நடித்துள்ளனர்.

இதில் நடித்திருப்பது பற்றி நமிதா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இயக்குனர் ஷெரிப், இந்த படத்திற்காக கதாநாயகி தேர்வுக்காக நாங்கள் 50 கதாநாயகி அழைத்தோம். 51 வது நபராக உங்களை இந்த படத்திற்காக நாயகியாக தேர்வு செய்து இருக்கிறோம் என்று கூறினார்.

அந்த 50 பேரின் ஆசீர்வாதமாக இந்த வாய்ப்பை நான் நினைக்கிறேன். அது தவிர இங்கும் நிறைய ஆசீர்வாதங்கள் இருக்கிறது. பாலாஜி சக்திவேல் சாரும் அர்ச்சனா மேடம் சொல்லிக் கொடுத்த பல விஷயங்கள் தான் இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன். ஆகையால் அவர்களுடைய ஆசீர்வாதமும் எனக்கு இருக்கிறது.

எல்லாருடைய இதயத்திற்கும் பிடிக்கும் விதமாக இப்படத்தை ஷெரிப் எடுத்து இருக்கிறார். பாலாவுடன் நடித்ததில் அவர் மனிதநேயமிக்க மனிதர் என்பது தெரிந்தது. அவருடன் நான் திரையை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !