உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில்

இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில்

நடிகர் பஹத் பாசில் கடந்த 2021ல் வெளியான புஷ்பா மற்றும் 2022-ல் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தென்னிந்திய அளவில் தனது நடிப்புக்காக மிகப்பெரிய அளவில் ரசிகர் வட்டத்தை பெற்றவர். அவர் நடிப்பது குறைவான எண்ணிக்கையிலான படங்கள் என்றாலும் கூட அவரது படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்தபோதும் வேட்டையன் படத்தில் காமெடி கலந்த குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்தபோதும் அவரால் ரசிகர்களை கவர முடிந்தது. அதே சமயம் கடந்த வருடம் வெளியான ஆவேசம் படத்தில் தனி ஒரு ஹீரோவாக படத்தை தாங்கி பிடித்து 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைத்தார். கடந்த வருடம் இறுதியில் வெளியான புஷ்பா 2 திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த வருடத்தில் கடந்த மாதம் தமிழில் மாரீசன் மற்றும் கடந்த வாரம் மலையாளத்தில் ஓடும் குதிரை சாடும் குதிரை என இரண்டு படங்களில் நடித்துள்ளார் பஹத் பாசில். ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. மாரீசன் படமாவது விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. ஆனால் ஓடும் குதிரை சாடும் குதிரை திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது.

சென்னையில் இரண்டாவது வாரத்தில் அந்த படம் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கூட கல்யாணியின் லோகா சாப்டர் 1 சந்திரா படத்திற்கு 65 சதவீத காட்சிகளும் மோகன்லால் இருதயபூர்வம் படத்திற்கு 30 சதவீத காட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பஹத் பாசில் படத்திற்கு வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவான காட்சிகளும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாகவே வெற்றி முகத்தில் இருந்து வந்த பஹத் பாசிலுக்கு தற்போது இறங்கு முகம் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக மலையாளத்தில் அவரது நடிப்பில் உருவாகி வரும் கராத்தே சந்திரன் படம் தான் அவரை கை தூக்கி விட வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !