உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் காந்தாரா 2ம் பாகத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல்

கேரளாவில் காந்தாரா 2ம் பாகத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல்

கடந்த 2022ல் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் நடித்து, இயக்கியுள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் பிரித்விராஜ் மற்றும் அவரது நண்பரான தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து வாங்கியுள்ளனர்.

இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லிஸ்டின் ஸ்டீபனுக்கும் படத்தின் முதல் இரண்டு வார கலெக்ஷனில் ஏற்பட்டுள்ள பங்கு பிரிக்கும் பிரச்னை காரணமாக இந்த படம் கேரளாவில் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. வினியோகஸ்தர் லிஸ்டின் ஸ்டீபன் இரண்டு வாரங்களுக்கு வசூலில் 55 சதவீதம் பங்கு தர வேண்டும் என கேட்கிறார்.

ஆனால் திரையரங்கு உரிமையாளர்களோ முதல் வாரம் மட்டுமே 55 சதவீத பங்கு தர ஒப்புக் கொண்டுள்ளனர். லிஸ்டின் ஸ்டீபன் இந்த விஷயத்தில் இறங்கி வர பிடிவாதம் காட்டுவதால், இந்த படம் கேரளாவில் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது இருந்தாலும் படம் வெளியாக இன்னும் மூன்று வாரங்கள் இருப்பதால் அதற்குள் இருதரப்பிலும் பேசி பிரச்னையை சரி செய்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !