உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா

கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா

உடுப்பி : கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு பல கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க நெக்லஸ் மற்றும் வாளை காணிக்கையாக வழங்கினார் இசையமைப்பாளர் இளையராஜா.



தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர் இளையராஜா. ஆயிரத்து ஐநூறு படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர். சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையமைத்து மற்றொரு மைல்கல்லை எட்டினார். ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார். ஆன்மிகத்தில் அதிக பக்தி கொண்ட இவர் கர்நாடக மாநிலம், உடுப்பி அடுத்துள்ள கொல்லூரில் அமைந்துள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு நேற்று சென்று வழிபட்டார். உடன் அவரது மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவும், பேரன் யத்தீஸ்வரும் சென்றனர்.



இளையராஜா குடும்பத்தினர் சார்பில் மூகாம்பிகைக்கு வைரத்தால் ஆன கிரீடம், தங்கத்தால் ஆன நெக்லஸ் மற்றும் அங்குள்ள வீரபத்திர சுவாமிக்கு தங்கத்தால் ஆன வாள் ஆகியவை காணிக்கையாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இளையராஜா காணிக்கையாக செலுத்திய இந்த ஆபரணங்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூகாம்பிகை மற்றும் வீரபத்திரருக்கு அணிவிக்கப்பட்டது.



தொடர்ந்து இளையராஜாவிற்கு கோவில் சார்பில் சிறப்பான மரியாதையும் செலுத்தப்பட்டது. கோவிலில் உள்ளவர்கள் இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா உடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !