ஹிந்தியில் ஹீரோ கிடைக்காததால் மிராஜ் படத்தை மலையாளத்தில் இயக்கினேன் ; ஜீத்து ஜோசப்
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில ஒருவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். மோகன்லாலை வைத்து இயக்கிய 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்கள் மூலமாக மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய மற்றும் பாலிவுட் ரசிகர்கள் வரை வரவேற்பு பெற்றவர். இதனைத் தொடர்ந்து இப்போது பாலிவுட்டிலும் சீரான இடைவெளியில் படங்களை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் அவரது இயக்கத்தில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள 'மிராஜ்' என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகனாக ஆசிப் அலி, நாயகியாக அபர்ணா பாலமுரளி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தை உருவாக்கியது குறித்து ஜீத்து ஜோசப் பேசும்போது, “இதை ஹிந்தியில் இயக்குவதற்காக தான் எழுதினேன். ஆனால் இந்த கதைக்கேற்ற கதாநாயகன் ஹிந்தியில் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. காரணம் இது படம் முழுவதும் கதாநாயகியின் பார்வையில் இருந்து சொல்லப்படும் விதமாக எழுதப்பட்ட கதை. அதன்பிறகு தான் இதை மலையாளத்திலேயே படமாக்கலாம் என முடிவு செய்தேன். அப்படி நினைத்ததுமே முதலில் என் நினைவுக்கு வந்தவர் ஆசிப் அலி தான்” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக ஜீத்து ஜோசப் இயக்கிய 'கூமன்' படத்திலும் ஆசிப் அலி கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.