உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன்

40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன்

தமிழ் சினிமாவில் வெளிவந்து ஓடாத சில படங்கள் கூட நம்மை ஏதோ ஒரு விதத்தில் நினைவில் வைத்துக் கொள்ளும். அப்படியான ஒரு படம்தான் 1982ல் வெளிவந்த 'காதல் ஓவியம்'. பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் அறிமுக நாயகன் கண்ணன், ராதா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். ஆனால், அந்தப் படம் அப்போது ஓடவேயில்லை. இருந்தாலும் படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்கள். இன்றும் கூட அந்தப் பாடல்கள் பலரது பிளே லிஸ்ட்டில் கண்டிப்பாக இருக்கும்.

அந்தப் படத்தில் கண் பார்வையற்ற பாடகர் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கண்ணன். அப்படத்திற்குப் பிறகு 1985ல் வெளிவந்த 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அமெரிக்கா சென்று வெவ்வேறு கம்பெனிகளில் பணிபுரிந்தார்.

40 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது அவரது நிஜப் பெயரான சுனில் கிருபாளனி என்ற பெயரில் நேற்று வெளிவந்த 'சக்தி திருமகன்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரையுலகில் இவ்வளவு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருவது அபூர்வமான ஒன்று. சுனிலின் வில்லன் நடிப்புக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் பஞ்சத்தை சுனில் தீர்த்து வைக்கவும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !