பிளாஷ்பேக்: இரு பெரும் ஜாம்பவான்கள் இணைந்து கொடுத்த தோல்விப் படம்
இயக்குனர்களில் ஜாம்பவானாக இருந்த பாலு மகேந்திராவும், நடிகர்களில் ஜாம்பவானாக இருந்த ரஜினிகாந்தும் இணைந்த ஒரே படம் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்'. 'நீங்கள் கேட்டவை' என்ற பக்கா கமர்ஷியல் படத்திற்கு பிறகு அதே பாணியில் பாலுமகேந்திரா இயக்கிய படம். ஆனால் படம் வெற்றி பெறவில்லை.
பாலுமகேந்திராவின் மற்ற படங்களை போல் இல்லாமல் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவானது. இந்த படத்தில் நேர்மையான போலீஸ் ஆபிசராக ரஜினிகாந்த் நடித்திருப்பார். உயர் அதிகாரியான செந்தாமரை செய்யும் ஒரு கொலையின் பழி ரஜினி மீது விழும், இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். பிறகு ரஜினி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து மீண்டும் பணியில் சேர்வதுதான் படத்தின் கதை.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மாதவி நடித்திருப்பார். நடிப்புடன் தனது அழகான கண்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார். வி.கே ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன், ஒரு விரல் கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மவுனிகாவுக்கு இதுதான் அறிமுக படமாகும். இந்த படத்தில் நடித்தபோதுதான் பாலுமகேந்திராவை காதலித்து அவரது துணைவியார் ஆனார் மவுனிகா.