'காந்தாரா' பார்க்கும் முன் அசைவம் சாப்பிடக்கூடாதா?: ரிஷப் ஷெட்டி விளக்கம்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் டிரைலர் நேற்று (செப்.,22) வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் படம் திரைக்கு வரவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில், படத்தின் தயாரிப்பாளர்களான ஹோம்பலே பிலிம்ஸ் சார்பாக வெளியிடப்பட்டதாக கூறும் போஸ்டர் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்தப் போஸ்டரில், காந்தாரா சாப்டர் 1ஐ பார்க்கும் வரையில் மது அருந்தால், புகைப்பிடிக்காமல், அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றுகுறிப்பிடப்பட்டிருந்தது. இது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி அந்த போஸ்டர் போலி என்றும், அதில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது யாரோ போலியா உருவாக்கிய போஸ்டர். எங்கள் கவனத்திற்கு அது வந்தபோது எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. படத்தின் பிரபல்யத்துக்கு இடையே தங்களை விளம்பரப்படுத்த நினைக்கும் சிலரின் வேலைதான் இது. இதற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என விளக்கமளித்துள்ளார்.