'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா?
ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் 'பாகுபலி 1, 2' ஆகிய படங்கள் வெளிவந்து வசூலில் சாதனை படைத்தன. அதன் பிறகுதான் பல சரித்திரப் படங்கள் இந்திய சினிமாவில் உருவாக ஆரம்பித்தன. அந்த இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக்கி 'பாகுபலி த எபிக்' என்ற பெயரில் அக்டோபர் 31ம் தேதி வெளியிட உள்ளார்கள். அதன் முடிவில் 'பாகுபலி 3' படத்திற்கான அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அப்படி எதுவும் இடம் பெறவில்லை என தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.
இப்போதைய சூழலில் 'பாகுபலி 3' உருவானால், அதற்காக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது தேவைப்படும். பிரபாஸ் தற்போது அடுத்தடுத்து பான் இந்தியா படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவற்றை முடிக்கவே இன்னும் நான்கைந்து ஆண்டுகள் ஆகும். மேலும், 'பாகுபலி 2' படத்தின் மொத்த பட்ஜெட்டில் 20 சதவீதம் மட்டுமே நடிகர்களின் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதே அளவிலான சம்பளத்தில் மீண்டும் பிரபாஸ் நடிக்க சம்மதிப்பார் என்பதெல்லாம் நடக்காத ஒன்றாகவே இருக்கும். அடுத்து, தனது கனவுப் படமாக 'மகாபாரதம்' படத்தை எடுக்க வேண்டும் என்ற ஏற்கெனவே சொல்லி இருக்கிறார் ராஜமவுலி. ஒருவேளை அதில் இறங்கினால் அதற்காக அவர் ஐந்தாறு வருடங்களாவது செலவிட வேண்டி இருக்கும். எனவே, 'பாகுபலி 3' என்பது எதிர்காலத்தில் உருவாகுமா என்பது சந்தேகம்தான்.