விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு மற்றும் பலர் நடிக்கும் படம் தயாரிப்பில் உள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் தலைப்பு குறித்து கடந்த வாரம் அறிவிப்பதாக இருந்தார்கள். ஆனால், கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் அடைந்ததால், அந்த நிகழ்வைத் தள்ளி வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். சென்னையில் பிறந்து வளர்ந்தவரான ஹர்ஷவர்தன் இதற்கு முன்பு தமிழில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், 3:33, ஜோதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
2017ல் தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து ஹிந்தி, தெலுஙகு, மலையாளம் ஆகிய மொழிகளில் இசையமைத்துள்ளார்.
'அனிமல்' ஹிந்திப் படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றவர் ஹர்ஷவர்தன். தற்போது தமிழில் ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.