ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல்
'கும்கி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன்பிறகு சுந்தர பாண்டியன், வேதாளம், பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரேவதி இடத்தை பிடிப்பார் என்று கருதப்பட்ட லட்சுமி மேனன் தனது துடுக்கத்தனமான பேச்சுகளாலும், எளிதில் அணுக முடியாதவராகவும் ஆனதால் வாய்ப்புகளை இழந்தார்.
இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பாரில் மது அருந்தும்போது லட்சுமி மேனனின் நண்பர்களுக்கும், இன்னொரு கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்தது. தப்பிச் சென்ற அந்த கும்பலை லட்சுமி மேனனின் நண்பர்கள் விரட்டி சென்று, காரை வழிமறித்து அதிலிருந்த ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த கும்பலில் நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி லட்சுமி மேனன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. மனுவை ஏற்று கோர்ட் வழக்கை ரத்து செய்யாவிட்டால் லட்சுமி மேனனுக்கு சிறை தண்டனை உறுதி என்கிறார்கள்.