மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம்
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானுக்கு நேற்று 60வது பிறந்தநாள். தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் மும்பை மன்னத் பங்களாவின் பால்கனியில் நின்று கொண்டு ரசிகர்களை சந்தித்து, கையசைத்து அவர்களது வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
நேற்றும் வழக்கம்போல அவரது பங்களா முன்னால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் ஷாருக்கான், ரசிகர்களை சந்திக்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, ரசிகர்களை சந்தித்து கையசைக்க வேண்டாம் என்று, மும்பை நகர போலீஸ் அதிகாரிகள் ஷாருக்கானுக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து அவர் ரசிகர்கள் முன் தோன்றவில்லை. பின்னர் சமூக வலைதளங்கள் மூலம் ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து நேற்றிரவு ஷாருக்கான் வெளியிட்டுள்ள பதிவில், 'எனக்காக காத்திருந்த அன்பான ரசிகர்களை என்னால் சந்தித்து பேச முடியாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். அனைவரிடமும் எனது மனப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். கூட்ட கட்டுப்பாட்டு பிரச்னை காரணமாகவும், அனைவருடைய பாதுகாப்புக்காகவும் இந்த கட்டுப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை புரிந்துகொண்ட ரசிகர்களுக்கு நன்றி.
என்னை நம்புங்கள். உங்களை சந்திக்க முடியாமல் போனதை உங்களை விட நான்தான் மிகவும் வருந்துகிறேன். அனைவரையும் சந்திப்பதற்கும், அன்பை பகிர்ந்துகொள்வதற்கும் அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்'என்று குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் நடந்த விஜய் பிரச்சாரத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவத்தின் எதிரொலியாகத்தான் மும்பை போலீசார் இந்த கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.