உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார்

சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார்


கேரளாவைச் சேர்ந்த கவுரி கிஷன் '96' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'மாஸ்டர், கர்ணன், ஹாட்ஸ்பாட், போட்' உள்ளிட்ட படங்களிலும் இந்த வாரம் வெளியான 'அதர்ஸ்' படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உருவ கேலி செய்த பத்திரிகையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்கள், மற்ற பிரபலங்கள், ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கவுரி கிஷனைத் தொடர்ந்து தற்போது 'பைசன்' பட நடிகை அனுபமா பரமேஸ்வரன், சமூக வலைத்தளங்களில் தன் மீது ஒரு நபர் தொடர்ந்து அவதூறு, வெறுப்புகளை பரப்பி வருவதாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டா தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சில நாட்களுக்கு முன்பு, ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு, என்னை, என் குடும்பத்தை, மற்றும் என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களை குறித்து மிகவும் அநாகரிகமான மற்றும் பொய்யான உள்ளடக்கத்தை பரப்பி வருவது என் கவனத்திற்கு வந்தது. அந்த பதிவுகள் மாற்றப்பட்ட படங்கள் மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியிருந்தன. இத்தகைய இலக்கு வைக்கப்பட்ட தொல்லை ஆன்லைனில் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது.

மேலும் விசாரணையில், அதே நபர் வெறுப்பை பரப்புவதற்காக மட்டுமே பல போலி கணக்குகளை உருவாக்கியிருந்தார் என்பது தெரியவந்தது, என்னுடன் தொடர்புடைய ஒவ்வொரு பதிவிலும் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை பதிவு செய்து கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

இதை அறிந்தவுடன், நான் உடனடியாக கேரளாவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். அவர்களின் பதில் விரைவானதும் திறமையானதுமாக இருந்தது. மற்றும் அவர்களின் உதவியுடன், இந்த செயல்களுக்கு பின்னால் இருந்த நபர் அடையாளம் காணப்பட்டார்.

அது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவளது இளம் வயதைக் கருத்தில் கொண்டு, நான் அவளது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை, ஏனெனில் அவளது எதிர்காலத்தை அல்லது மன அமைதியைக் கெடுக்க விரும்பவில்லை.

இருப்பினும், இந்த சம்பவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அல்லது சமூக ஊடகத் தளங்களுக்கு அணுகல் இருப்பது யாருக்கும் மற்றவர்களை தொல்லை செய்ய, அவதூறு செய்ய, அல்லது வெறுப்பைப் பரப்ப உரிமை அளிக்காது. ஆன்லைனில் ஒவ்வொரு செயலும் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறது, மற்றும் பொறுப்புக்கூறலைப் பின்பற்றும்.

நாங்கள் சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளோம், மற்றும் அந்த நபர் தனது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.

நடிகராகவோ அல்லது பொது நபராகவோ இருப்பது அடிப்படை உரிமைகளை பறித்துவிடாது. சைபர் புல்லிங் ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும், மற்றும் பொறுப்புக்கூறல் உண்மையானது,” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில பல வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் பலர் அவதூறுகளையும், வெறுப்புகளையும், பொய்களையும் பரப்பி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில முன்னணி நடிகர்களின் மேனேஜர்கள் இதைச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இப்படியானவர்கள் மீது சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சைபர் கிரைம் போலீசாரும் அவர்களைக் கண்காணித்து கடும் தண்டனையை வாங்கித் தர வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !