ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள்
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு நாளை மறுதினம் நவம்பர் 15ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.
தற்காலிகமாக 'குளோப் ட்ராட்டர்' என்ற தலைப்பில் அப்படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன. ஐதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் நிகழச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100 அடி உயரம், 130 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டத் திரை மேடை மீது அமைக்கப்பட உள்ளதாம். இவ்வளவு பிரம்மாண்டமான திரைப்பட விழா இதுவரையில் நடந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு நடத்த உள்ளார்களாம்.
விழா குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ராஜமவுலி. அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். காவல்துறையின் ஆலோசனைப்படி 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்கும் அனுமதி இல்லை. சமீபத்தில் விஜய்யின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது, ஆந்திராவில் கோவில் நெரிசலில் நடந்த உயிரிழப்புகள், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஆகியவற்றை வைத்து கடும் கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளது. அவற்றைப் பின்பற்றுமாறு ராஜமவுலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.