உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள்

பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள்

விசு இயக்கி மிகப்பெரிய வெற்றி படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. இந்த படத்தை ஆரம்பிக்கும்போது அதில் மனோரமா இல்லை. படத்தின் கதையை படித்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன். கதை சீரியசாக இருக்கிறது. இதில் கொஞ்சம் காமெடி இருந்தால் நன்றாக இருக்கும் மனோரமாவை வைத்து ஒரு காமெடி டிராக் செய்யுங்கள் என்றார்.

ஆனால் மனோரமாவை மனதில் வைத்து ஒரு வேலைக்காரி கேரக்டரை உள்ளே கொண்டு வந்து அந்த கேரக்டர் மற்ற கேரக்டர்களை விமர்சிப்பது மாதிரியான டிராக்கை விசு எழுதினார். பட வெளியீட்டுக்கு பிறகு அந்த கேரக்டரும் பேசப்பட்டது, காமெடியும் ரசிக்கப்பட்டது. குறிப்பாக மனோரமா பேசும் 'கம்முனு கெட' டயலாக் பாப்புலரானது.

இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் 'சம்சாரம் ஒகா சதாரங்கம்.' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தது. இதனை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். விசு நடித்த ரோலில் கொல்லபுடி மாருதி ராவ் நடித்தார். ஆனால் மனோரமா கேரக்டருக்கு ஆள் கிடைக்கவில்லை.

அப்போது அங்கிருந்த முன்னணி காமெடி நடிகைகள் படத்தை பார்த்து விட்டு மனோரமா அளவிற்கு எங்களால் நடிக்க முடியாது என்று பின்வாங்கி விட்டனர். இதனால் இறுதியாக சவுகார் ஜானகி தேர்வானார். அவரும் முதலில் நடிக்க தயங்கினார். நான் சொதப்பி அதனால் படத்துக்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்றார்.

பின்னர் ஒருவழியாக அவரை சம்மதிக்க வைத்து ஆந்திர மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் பேசும் தெலுங்கு வழக்கு மொழியை சவுகார் ஜானகிக்கு பயிற்சி கொடுத்து பின்னர் அவர் நடித்தார். அதோடு 'கம்முனு கெட' என்ற வார்த்தைக்கு நிகரான தெலுங்கு வார்த்தை கிடைக்கவில்லை. படம் வெளியாகி அங்கு 100 நாட்கள் ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !