உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு

‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு


ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு நேற்று (நவ.,15) ஹைதராபாத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ‛வாரணாசி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மகேஷ்பாபு ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதற்கான அறிமுக போஸ்டர் மற்றும் வீடியோவுடன் அறிவித்துள்ளனர். அதில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. கும்பா கதாபாத்திரத்தில் பிரித்விராஜூம், மந்தாகினி கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவும் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய மகேஷ்பாபு, ‛‛என் தந்தையான நடிகர் கிருஷ்ணா, ஒரு புராணப் படத்தில் நடிக்க சொன்னார். அதற்கு உடன்படவில்லை. ஆனால் இப்போது இந்தப் படத்தின் மூலம் அவரது ஆசையை நிறைவேற்றுகிறேன். இன்று என் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். இது என்னுடைய கனவு திரைப்படம். வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே இப்படியான வாய்ப்பு கிடைக்கும். இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநரை அதிகம் பெருமைப்படுத்துவேன். 'வாரணாசி' படம் ரிலீஸ் ஆனதும் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களைப் பார்த்து பெருமைப்படும். இந்த விழா படத்தின் தலைப்பு அறிமுகப்படுத்துவதற்காக மட்டுமே. எதிர்காலத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் ரசிகர்களுக்காகக் காத்திருக்கிறது'' எனப் பேசினார்.
ராஜமவுலி
இயக்குனர் ராஜமவுலி பேசியதாவது: இந்தப் படத்தின் ஒரு முக்கியமான பகுதி ராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியை உள்ளடக்கியது. அந்த காட்சியில் மகேஷ் பாபு 'ராமர்' வேடத்தில் நடித்தபோது எனக்கு மெய்சிலிர்த்தது. நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா, இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினார். பல புது தொழில் நுட்பத்தை தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்த அறிமுக வீடியோவை வெளியிட ஏகப்பட்டவர்களின் உழைப்பு இருக்கிறது. 45 ஜெனரேட்டர்கள், 3 பிரமாண்ட கிரேன், நிறைய பேரின் உழைப்பில் 100 அடி பிரமாண்ட் ஸ்கிரீனில் காண்பிக்க திட்டமிட்டோம். ஆனால் அதை டெஸ்ட் செய்யும்போது சிலர் ட்ரோனில் படம் பிடித்தனர். அது வருத்தமாக இருக்கிறது.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் என் தந்தைக்கு உண்டு. என் அப்பா, என் மனைவி ஆஞ்சநேயர் பக்தர்கள். ஐமேக்ஸ் கேமராவில் இந்த படம் எடுக்கப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம் சின்ன வயதில் இருந்தே தாக்கத்தை உருவாக்கி உள்ளது. ராமாயணத்தின் அங்கமான ஒரு கதையை இந்த படத்தில் எடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !