பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார்
'கேஜிஎப்' திரைப்படம் மூலம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் பிரபலமானவர் நடிகர் யஷ். தற்போது 'டாக்ஸிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இவரது தாய் புஷ்பா அருண்குமாரும் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் தான். இவர் தயாரிப்பில் 'கொத்தல் வாடி' என்கிற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் பப்ளிசிட்டி செலவுகளுக்காக 64 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக மற்றும் மிரட்டியதாக ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார் தயாரிப்பாளர் புஷ்பா.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் பப்ளிசிட்டி செலவாக 23 லட்சம் ரூபாய் பேசப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே பப்ளிசிட்டி வேலைகளை தொடங்க பிஆர்ஓ ஹரிஷ் அர்ஸ் என்பவரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதேசமயம் படம் முடிந்தும் ரிலீஸ் தேதி நெருங்க ஆரம்பித்தும் கூட படம் குறித்த எந்த வித பப்ளிசிட்டியும் செய்யாமல் மேற்கொண்டு பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்தனர். பணம் தரவில்லை என்றால் படத்தைப் பற்றி தவறான செய்திகளை பரப்புவதுடன் மீடியா தங்கள் கையில் இருப்பதால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பற்றி தவறாக செய்தி பரப்புவோம் என்றும் மிரட்டினர்.
இதனை தொடர்ந்து எங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்து ஹரிஷ் அர்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளான மனு, நித்தின், மகேஷ் குரு, சொர்ணலதா ஆகியோர் மீது பெங்களூருவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இதன் பின்னணியில் நீதிமன்றத்திலும் இது குறித்து ஒரு இடைக்கால தடையும் பெற்றுள்ளோம்” என்று கூறியுள்ளார்.