மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவுக்குத் தியேட்டர்களில் வெளியான, கடந்த சில படங்கள் வெற்றிகரமாக அமையவில்லை. மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றிக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள 'கருப்பு' படம் எப்போது வெளிவரும் என்பது குறித்து சரியான தகவல் வெளியாகவில்லை.
இதனிடையே, சூர்யா அடுத்தும் ஒரு தெலுங்கு இயக்குனரிடம் கதையைக் கேட்டதாகத் தெரிகிறது. 'ப்ரோசெவருவருரா, அண்டே சுந்தரன்கி, சரிபொத்த சனிவாரம்' ஆகிய படங்களை இயக்கியுள்ள விவேக் ஆத்ரேயா சமீபத்தில் சூர்யாவைச் சந்தித்து கதை சொன்னாராம். அந்தக் கதை பிடித்துள்ளதாக சூர்யா தரப்பிலும் சொல்லி இருக்கிறார்களாம்.
வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல்' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருக்கிறது. ஆனால், சூர்யா அடுத்தடுத்து வெவ்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.