வெப் தொடரில் லட்சுமி பிரியா
மகிழ்திருமேனி இயக்கிய 'முன்தினம் பார்த்தேனே' படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி பிரியா சந்திரமவுலி. அதன் பிறகு 'கௌரவம், சுட்ட கதை, கள்ளப்படம், மாயா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், கர்ணன், சொப்பன சுந்தரி, தணல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தற்போது அவர் நடித்துள்ள வெப் தொடர், 'குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன்'. சோனி லைவ் தளத்தில் டிசம்பர் 5 முதல் வெளியாகும் இந்த தொடரில் பசுபதி விதார்த் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
செல்வமணி இயக்கியுள்ளார். தொடர் குறித்து அவர் கூறியதாவது: இந்த தொடரின் ஒவ்வொரு முடிவின் போதும் மர்மங்கள் மேலும் பெரிதாகி கதையின் சுவாரசியத்தை அதிகமாக்கும். மேலும் குற்ற உணர்விற்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க கூடிய ஒரு உளவியல் பயணத்தை நமக்கு அளிக்கும்.
நம்பிக்கைக்கும் சட்டத்திற்கும் நடுவே சிக்கியபோது ஒருவர் எவ்வளவு தூரம் செல்ல தயாராக இருப்பார்? நல்ல நோக்கில் செய்த செயல்களே எதிர்பாராத ஆபத்தான விளைவுகளை உண்டாக்க, மறைக்கப்பட்ட மர்மங்கள் வெளிப்படத் தொடங்குகின்றன. ஒவ்வொரு மறைக்கப்பட்ட உண்மையும் வெளிவரத் தொடங்கும் போது, கதையில் பதட்டமும், உளவியல் ரீதியாக விடுபடுவதற்கும் மற்றும் குற்ற உணர்ச்சிக்கும் இடையே நடக்கும் நுண்ணிய போராட்டமும் வெளிப்படும் . என்றார்.