31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர்
தமிழ், தெலுங்கு திரை உலகைப் போலவே மலையாளத்திலும் மோகன்லால், மம்முட்டி நடித்த படங்கள் அவ்வப்போது ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் 31 வருடங்களுக்கு முன்பு வெளியான கமிஷனர் திரைப்படம் தற்போது டிஜிட்டல் முறையில் 4k தொழில்நுட்பத்தின் மாற்றப்பட்டு வரும் ஜனவரி மாதம் ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பிரபல கமர்சியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இந்த படத்தை இயக்க, ஷோபனா கதாநாயகியாக நடித்திருந்தார். சுரேஷ் கோபியின் பல ஹிட் படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் ரெஞ்சி பணிக்கர் இந்த படத்தின் கதையை எழுதியிருந்தார்.
இந்த படம் சுரேஷ்கோபியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்து அவரை முன்னணி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதுமட்டுமல்ல தமிழ்நாடு, ஆந்திராவிலும் இந்த படம் வரவேற்பை பெற்றது. தமிழில் சுரேஷ்கோபி என்கிற நடிகரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்த படம் தான். அதேபோல ஆந்திராவிலும் இந்த படம் 100 நாள் ஓடியது. சமீப வருடங்களாக சுரேஷ்கோபி தீவிரமாக அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் அவரது படங்கள் ஏதோ ஒன்று இரண்டு மட்டுமே வெளியாகி வருகின்றன. அந்த குறையை போக்கும் விதமாக தற்போது கமிஷனர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.