உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், 86, வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனையால் இன்று (டிச.,04) காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சரவணன் மறைவுக்கு ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவு : தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவு செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஏ.வி.எம்.நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணின் பங்கும் அளப்பரியது.



புதல்வராகவும், திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை ஏ.வி.எம்.ற்கு புகழ் சேர்த்தவர் சரவணன். அண்ணாத்துரையின் “ஓர் இரவு”, தலைவர் கருணாநிதியின் “பராசக்தி”, முரசொலி மாறனின் “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏ.வி.எம்.சரவணன்.

கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் ஏ.வி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்பு நலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏ.வி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !