இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு
பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' படத்தில் 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் இடம்பெற்ற, 'கருத்த மச்சான்' மற்றும் 'பணக்காரன்' படத்தில் இடம்பெற்ற '100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு' ஆகிய பாடல்களை பயன்படுத்தி இருந்தனர்.
இதை எதிர்த்து அந்த பாடல்களை நீக்க வேண்டும் என்று இளையராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாடல்களின் உரிமை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், சோனி நிறுவனத்திடம் இருந்து அனுமதியை பெற்று, இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் டியூட் படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகவும், பாடலை பயன்படுத்தியதற்காக படத்தில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இளையராஜாவுக்கு மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கியதாக கூறப்படுகிறது.