ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று(டிச., 12) சென்னையில் நடந்தது. இதில் திருப்பூர் சுப்ரமணியன், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள் பேசியது....
தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. படத்தின் வெளியீட்டு தேதியில் இருந்து 100 நாட்களுக்கு பின்னரே ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளோம். அவர்களுக்கு மட்டுமே இனி ஒத்துழைப்பு தரப்படும். வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து பூஜை போடும் படங்களுக்கு இது பொருந்தும்.
இப்போது ஓடிடி தளங்கள் தான் படத்தின் ரிலீஸை முடிவு செய்கிறார்கள். கடந்த 3 மாதங்களாக எந்த படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கவில்லை. பெரிய ஹீரோக்கள் நடித்த 5 படங்களை கூட இன்னும் ஓடிடி வாங்கவில்லை. தீபாவளிக்கு கூட பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை. இதற்கு ஓடிடியின் ஆதிக்கமே காரணம்.
28 நாட்களில் ஓடிடி ரிலீஸ் எனும் இப்போதைய நடைமுறையால் நெருக்கடி ஏற்படுகிறது. திரையரங்கில் உணவு பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தயாரிப்பார்கள் தான் ரிலீஸ் தேதியை வரையறை செய்ய வேண்டும், அப்போது தான் சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சினிமா டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது'' என்றனர்.