வாழ்ந்த தெருவுக்கு மனோராமா பெயர்: முதல்வருக்கு நடிகர் சங்கம் கடிதம்
சென்னை தி.நகரில் நடிகை மனோரமா வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டு நடிகர் சங்கம் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளது. தலைவர் நாசர் எழுதியுள்ள இந்த கடித்தில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு, தமிழ்த் திரைக் கலைஞர்களுக்கு வழங்கும் அன்பும் மரியாதையும் அவர்கள் உழைப்பிற்கும், திறமைக்கும் அழியாப் பெருமையும், புகழும் சேர்த்து வருகிறது. அவ்வகையில், மறைந்த நடிகர்கள் ஜெயசங்கர், விவேக், எஸ்.வி.வெங்கடராமன் பெயர்களை கொண்டு சென்னையின் தெருக்களுக்கு பெயர் சூட்டி அலங்கரித்ததை பெரு நன்றியோடு நினைவு கூறுகிறோம்.
மேலும், நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பெயரை சூட்டியதும், சென்னையின் மையத்தில் அமைந்த ஒரு போக்குவரத்து தீவுக்கு இயக்குநர் சிகரம். கே.பாலச்சந்தர் பெயரை சூட்டியதும், கலைஞர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், தமிழ்த் திரைப்பட உலகின் பொக்கிஷமாக கருதப்படும், மறைந்த பத்மஸ்ரீ, கலைமாமணி மனோரமா வாழ்ந்த தியாகராயர் நகர் நீலகண்ட மேத்தா தெருவிற்கு, அவருடைய பெயரைச் சூட்டி கவுரவிக்க வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தங்களிடம் ஒரு பணிவான கோரிக்கையை சம்ர்ப்பிக்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் சங்கம் முதல்வருக்கு அனுப்பி உள்ள மற்றொரு கடிதத்தில் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக நிறுவப்பட்டுள்ள நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களது திருவுருவச் சிலையை, அங்கு நடந்து வரும் மேம்பாலப் பணிகளால் இடமாற்றம் செய்ய மதுரை நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அனேக கலை உலக வித்தகர்களின் வாழ்வுக்கும், புகழுக்கும் அஸ்திவாரமாக விளங்கிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களது திருவுருவச் சிலையை தமுக்கம் மைதானப் பகுதியிலிருந்து அகற்றாமல், தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழ்த்தாய் சிலைக்கு அருகிலோ, தமுக்கம் மைதானத்தின் உள்ளே வேறு ஒரு பொருத்தமான இடத்திலோ அமைத்துத் தர அனுமதி தந்து அவர்தம் புகழுக்கு பெருமை சேர்க்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தங்கள் கருணைமிகு பரிசீலனைக்கு சமர்ப்பிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.