அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே
இயக்குனர் பாரதிராஜா கடந்த பல மாதங்களாக எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. மார்ச் மாதம் அவர் மகன் மனோஜ் திடீரென மரணம் அடைந்ததை தொடர்ந்து மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் வீட்டுக்குள்ளே முடங்கிப்போனார். வயது காரணமாக அவர் உடல் நிலையிலும் சில தொந்தரவுகள் கொடுக்க எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
சில மாதங்கள் மலேசியாவில் அவர் மகள் வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்து இந்தியா திரும்பினார். இப்போது சென்னை வீட்டில் இருக்கிறார். அவரை ராதிகா உள்ளிட்ட சிலர் மட்டுமே நேரில் சந்தித்து பேசியுள்ளனர். மற்றபடி, சினிமா நண்பர்கள், சினிமா விஐபிகளை அவர் சந்திக்கவில்லை. நல்ல படங்கள் வந்தால் அதை பாராட்டுவது பாரதிராஜா வழக்கம். அதுவும் பல மாதங்களாக மிஸ்சிங். நடிப்பதையும் நிறுத்திவிட்டாரர்.
எப்போதும் சினிமா நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்து கொள்வார். ஆனால், 9 மாதங்களாக அவரின் என் இனிய தமிழ் மக்களே என்ற குரலை யாரும் கேட்க முடியவில்லை. அடுத்த ஆண்டாவது அவர் உடல்நலம் பெற்று பழைய படி உற்சாகமாக நடை போட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் அவரின் நண்பர்கள், ரசிகர்கள்.