தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கும் சிராக் ஜானி
பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சிராக் ஜானி, தமிழில் காப்பான், துணிவு, அகிலன் படத்தில் நடித்துள்ளார். தற்போது 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். வரலாற்று கதையாக உருவாகும் இந்த படத்தில் அவர் முகலாய மன்னர் முகமது பின் துக்ளக் கேரக்டரில் நடிக்கிறார். காமெடியாக சித்தரிக்கப்பட்ட முகமது பின் துக்ளக் கேரக்டர் இதில் கொடூர வில்லனாக சித்தரிக்கப்படுவதாக தெரிகிறது.
இது குறித்து இயக்குநர் மோகன் ஜி கூறுகையில், “முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடிகர் சிராக் நடித்துள்ளார். வெறும் வில்லனாக மட்டுமல்லாது புத்திசாலித்தனம் நிறைந்த தனது சொந்த முடிவுகளின் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளும் நபராக வருவார். உடல் ரீதியாக வலுவாகவும் அதேசமயம், புத்திசாலித்தனத்தையும் நடிப்பில் கொண்டு வரும் வகையிலான நடிகரை நாங்கள் எதிர்பார்த்தோம்.
துக்ளக்கை புத்திசாலித்தனமான முட்டாள் என்று வரலாறு நினைவு கூறுகிறது. அந்த முரண்பாட்டைப் படம்பிடிக்க மிகப்பெரிய கட்டுப்பாடு தேவை. சிராக் முழு ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அச்சுறுத்தல், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்” என்றார்.
இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பிலிப் ஆர். சுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.