பிளாஷ்பேக் : உலகம் அறியாத நட்பு
புராண படங்கள் இயக்கி புகழ் பெற்றவர் ஏ.பி நாகராஜன். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடித்து வந்த அவர் பின்னர் சமூக படங்கள் இயக்கி அதன் பிறகு புராண படங்களுக்கு வந்தார். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் வி.கே. ராமசாமி. சில படங்களில் நாயகனாகவும் அதன்பிறகு வில்லன் மற்றும் குணச்சித்திர காமெடி வேடங்களில் நடித்தார்.
மேற்கண்ட இருவருமே ஒரே பள்ளியில் படித்து ஒரே நாடக கம்பெனியில் சேர்ந்து அங்கிருந்து ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள். பாலிய பருவத்தில் இருந்து கடைசி காலம் வரை இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். அவர்களது நட்புக்கு ஒரு சிறிய உதாரணம் இது :
நட்பின் அடிப்படையில் ஏ.பி.நாகராஜன், 'நாம ஏன் சொந்தமாகப் படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கக் கூடாது?' என்று கேட்டார், வி.கே.ராமசாமியிடம். யோசனைகளுக்குப் பிறகு, ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் என்ற பெயரில் இருவரும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள். திடீரென்று ஒரு நாள், ஏ.பி. நாகராஜன், “இது உங்களின் சொந்த நிறுவனமாக இருக்கட்டும். நான் பார்ட்னராவதற்கு என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, சேர்ந்து உழைப்போம்” என்று சொல்ல, அதை ஏற்கவில்லை வி.கே.ராமசாமி. “பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சேர்ந்தே ஆரம்பிப்போம் என்று கூறி, அவரையும் இணைத்துக்கொண்டார் வி.கே.ராமசாமி.
ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த முதல் படம், 'மக்களைப் பெற்ற மகராசி'. இதில் சிவாஜி, பானுமதி, நம்பியார், சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, சகாதேவன், எம்.என்.ராஜம், கண்ணாம்பா, டி.பி.முத்துலட்சுமி என பலர் நடித்தனர். கே.சோமு இயக்கிய இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். படமும் பெரிய வெற்றி பெற்றது.