பிளாஷ்பேக்: தடைகள் மற்றும் சிரமங்களைக் கடந்து வெளிவந்தும், பெரிய வெற்றியைப் பெறத் தவறிய “குறவஞ்சி”
மு கருணாநிதி, எம் ஜி ஆர், எம் ஜி சக்ரபாணி, பி எஸ் வீரப்பா, இயக்குநர் ஏ காசிலிங்கம் என இந்த ஐந்து பேர் இணைந்து நடத்தி வந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்தான் “மேகலா பிக்சர்ஸ்”. சில காலங்களுக்குப் பின் எம் ஜி ஆர், எம் ஜி சக்ரபாணி, பி எஸ் வீரப்பா ஆகியோர் அதிலிருந்து விலகிய நிலையில், மு கருணாநிதியும், இயக்குநர் ஏ காசிலிங்கமும் பங்குதாரர்களாக இருந்து “மேகலா பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்த ஒரு திரைப்படம்தான் “குறவஞ்சி”.
1957ம் ஆண்டு இந்த இருவரின் முயற்சியில் படத்திற்கான தொடக்க விழா வடபழநி பாரமவுண்ட் ஸ்டூடியோவில் ஏற்பாடாகியிருந்த நிலையில், படத்தின் இயக்குநராக ஏ காசிலிங்கமும், படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தை மு கருணாநிதியும் பொறுப்பேற்க, இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன், ராஜசுலோச்சனா, ஓ ஏ கே தேவர், மைனாவதி, குலதெய்வம் ராஜகோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தனர்.
கவிஞர் கண்ணதாசன், தஞ்சை என் ராமய்யாதாஸ், மு கருணாநிதி ஆகியோர் படத்திற்கான பாடல்களை எழுத, பின்னணிப் பாடகர் சி எஸ் ஜெயராமன் இசையமைப்பில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யபட்டு, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தில் குறிப்பிட்ட சில வசனங்களை பேசமாட்டேன் என நடிகை ராஜசுலோச்சனா மறுப்பு தெரிவிக்க, அதன் காரணமாக படத்திலிருந்து அவர் விலகும் நிலை ஏற்பட்டு, பின் அந்தக் கதாபாத்திரத்திற்காக நடிகை சி ஆர் விஜயகுமாரி ஒப்பந்தமும் செய்யப்பட்டார்.
இதனிடையே தயாரிப்பு செலவுக்காக பைனான்ஸ் ஏற்பாடு செய்வதற்காக இயக்குநர் ஏ காசிலிங்கம், நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி மற்றும் சில நண்பர்களோடு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ஆந்திராவிலுள்ள ஓங்கோல் என்ற ஊரில் இவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளாக, பலத்த காயமுற்ற இவர்கள் ஓங்கோல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, பின் சென்னை வந்தடைந்தனர். இதன் காரணமாகவும் “குறவஞ்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் சுணக்கம் ஏற்பட்டது.
இதன் பின்னர் மேலும் சில பிரச்னைகள் காரணமாக படத்தின் நாயகன் எஸ் எஸ் ராஜேந்திரன் மற்றும் நாயகி விஜயகுமாரியும் படத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட்டு, பின் அவர்களது கதாபாத்திரங்களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், நடிகை சாவித்திரியும் ஒப்பந்தமாயினர். நடிகர் சிவாஜிகணேசன் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியிருந்த இந்த காலகட்டங்களில், அவர் அதுவரை சார்ந்திருந்த அரசியல் கட்சியான திமுகவிலிருந்து அவர் விலகும் நிலை ஏற்பட, மேலும் “குறவஞ்சி” படத்தின் வெளியீட்டில் தடங்கல் ஏற்பட்டதால், ரசிகர்களின் கொந்தளிப்பு அதிகமாகி, “குறவஞ்சி” திரைப்படத்தைப் பார்க்கமாட்டோம் என சொல்லும் அளவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.
அப்போது படத்தின் இயக்குநர் ஏ காசிலிங்கம், மு கருணாநிதி இருவரும் இணைந்து, பல சிரமங்களுக்கு இடையே, 1960ம் ஆண்டு மார்ச் திங்கள் 4 அன்று, தமிழகம் முழுவதும் படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டு, படத்தை முடித்தும் வெளியிட்டனர். ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லாததாலும், படத்தில் கதாபாத்திரங்கள் சரியாக அமையவில்லை என்ற பத்திரிகைகளின் விமர்சனங்களாலும் இந்த “குறவஞ்சி” திரைப்படம் பெரும் வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடிக்க அப்போது தவறியது என்பதை யாரும் மறுக்க இயலாது.