'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனரின் அடுத்த படம் குறித்து சிலாகிக்கும் ராம் கோபால் வர்மா
கடந்த வருடம் மலையாளத்தில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்கிற திரைப்படம் வெளியாகி, மலையாள சினிமாவில் அப்போதைய நிலையில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றது. சிதம்பரம் என்பவர் இயக்கி, 'கூலி' புகழ் சவுபின் சாஹிர் தயாரித்து நடித்த இந்த படம் பெரிய அளவில் பிரபலமில்லாத 10 நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது..
இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சிதம்பரம் தற்போது 'பாலன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்சன் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது, இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதெல்லாம் தற்போது வரை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருக்கிறார்கள்.
மஞ்சும்மேல் பாய்ஸ் அதன் மூலமாக பாலிவுட் பிரபலங்களிடமும் இயக்குனர் சிதம்பரம் பாராட்டைப் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் சிதம்பரம் தனது பாலன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருந்தபோது ஏதேச்சையாக அங்கு வருகை தந்த பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு அந்த படத்தில் இருந்து ஒரு சிறிய காட்சியை போட்டு காட்டி இருக்கிறார் சிதம்பரம். அதை பார்த்து பிரமித்து போன ராம்கோபால் வர்மா, “சிறிய ஒரு துண்டு காட்சியை தான் பார்த்தேன். பாலன் திரைப்படம் அற்புதத்திற்கு அப்பாற்பட்டது” என்று சிலாகித்துக் கூறியுள்ளார்.