மே மாதத்திற்கு முன்பு வரை ‛ஜனநாயகன்' வெளிவர வாய்ப்பில்லையாம்
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். விஜயுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். முதலில் இந்த படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள், அது தொடர்பான வழக்குகள் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.
என்றாலும் தற்போது வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு தணிக்கை சான்றிதழ் வழங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் படம் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஏப்ரல் 30ம் தேதி வரை வெளியீடு சாத்தியமில்லை என்று கனடா விநியோக நிறுவனமான 'யார்க் சினிமாஸ்' அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் ஏப்ரல் 30க்கு முன்பு 'ஜனநாயகன்' வெளியாகாது. முன்பதிவு செய்தவர்களில் யாருக்காவது பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால், தியேட்டர்களை தொடர்பு கொள்ளலாம். புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் மெம்பர்ஷிப் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் ஜனநாயகன் படம் அரசியல் படம் என்பதால் அது வெளியாக தேர்தல் கமிஷன் அனுமதிக்காது என்று கூறப்படுகிறது. இதனாலேயே படம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தான் வெளிவரும் என்று தெரிகிறது.