உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு

இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு புது நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடந்தது. முன்னதாக தலைவராக ஆர்.கே.செல்வமணி, செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, துணைத் தலைவர்களாக பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். நேற்று நடந்த தேர்தலில் 5 இணைச் செயலாளர் பதவிகளுக்கு சரண், சுந்தர்.சி, எழில், ஏகம்பவாணன், நம்பி ஆகியோரும் முருகதாஸ், மாதேஷ் உள்ளிட்ட 17 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இன்று பதவி ஏற்றனர்.

விழாவில் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், விரைவில் சங்கம் வழி சம்பளத்தை அறிமுகப்படுத்த உள்ளோம் . சங்கத்தில் நிதி ஸ்திரத்தன்மையை கட்டமைக்க வேண்டும். எல்லா உறுப்பினர்களும் அவர்கள் வேலை செய்வதை படம் குறித்து பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் அவர்கள் பணம் கட்ட உதவி இயக்குனருக்கு 2 ஆயிரம் ரூபாயும், இயக்குனருக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்க தீர்மானம் கொண்டு வரப்படும்.

நான் சினிமாவுக்கு வந்தது டைரக்ட் செய்ய வந்தேன். இன்று சின்ன திரைப்படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 50 சதவிகிதத்துக்கும் மேலான சங்க உறுப்பினர்கள் விரக்தியில் உள்ளனர். அவர்கள் செய்யும் வேலையை பதிவு செய்யாமல் உள்ளனர். இன்று சினிமா மாறிவிட்டது. தமிழ் தயாரிப்பாளர்களுக்கு கதை சொன்ன காலம்போய், மும்பையில் உள்ள முகம் தெரியாத தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்ல வேண்டிய காலத்தில் உள்ளோம். படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர்கள் நட்போடு இருக்கலாம், ஆனால் அடிமையாக இருக்கக்கூடாது.

நான் சில படப்பிடிப்புகளுக்கு சென்றபோது, அங்கு இயக்குனர்கள் அடிமையாக உள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர்கள் சுயமரியாதையை இழக்கக்கூடாது. கதை நன்றாக இருக்கிறது என்பதற்காக இயக்குனர் வாய்ப்பு கொடுக்கக்கூடாது. இயக்குனர்கள் தங்களின் முட்டாள் தனங்களை கைவிட வேண்டும். படத்துக்கு கதாசிரியர்கள் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும்.

இவ்வாறு செல்வமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !